Wednesday, January 18, 2012

பேரானந்த நிலை

சதா சர்வ காலமும் பேரின்பத்தில் திளைத்திருப்பதே “ஆத்மா ஞானம்” என்று கூறப்படுகிறதே, உங்கள் அனுபவம் என்ன ?

“நிலைகளை எதிர் நோக்கியே ‘ஞான விடுதலை’ ஒத்திப் போடப்படுகிறது என்பதையறிந்து கொண்டாய்... மிக உயர்ந்தவை என நீ நினைக்கும் எப்பேர்பட்ட நிலைகளுமே உன் மனதின் கற்பனைகளுக்குள்ளும், ஏற்கனவே அறிந்தவைகளுக்குள்ளும் அடங்கி விடுகிறது...

இயல்பிலிருந்து வேறுபடும் அவ்வித நிலைகளுமே அதன் எதிர்த்தன்மையை உள் வைத்துக்கொண்டே தோன்ற முடியும்.

பயிற்சி, முயற்சிகளின் மூலம் ஒருக்கால் பேரின்ப நிலையை எட்டிய மனம், அதன் தொடர்ச்சியாக பெருந்துக்க நிலையையும் சந்தித்தே தீரவேண்டும்...

“நிலைகளை” எப்போதும் அதன் எதிர்த் துருவங்கள் ஈர்த்துக் கொண்டேயிருக்கின்றன...

இயல்பான மையத்திலிருந்து ஒரு புறமாக இழுத்து நிறுத்திய ஊஞ்சலை விட்டு விட்டால் உடனடியாக மீண்டும் மையத்திற்கு வந்து நின்றுவிடுவதில்லை...

இப்படியும் அப்படியுமாக ஆடியே நிற்கிறது....

எல்லா நிலைகளுமே ஒரு வித இன்ப நாட்டமே...அது எல்லைகளுக்குட்பட்டது, இன்பங்கள் எல்லாவற்றிலும், துன்பங்கள் பொதிந்து வைக்கப்பட்டுள்ளதை நீ அறிவாய்...

ஏற்கனவே நீ கற்றறிந்துள்ள, கேட்டறிந்துள்ள உன்னுடைய மனக் கற்பிதங்களுக்குட்பட்டே நீ கூறும் “பேரானந்த நிலையை” வரையறுத்துக் கொள்ள இயலும்...

எப்பேர்ப்பட்ட நிலையாயினும் அது வந்து போகக் கூடியதே என்பது உனக்கு தெளிவானதா...?”

“அப்படியானால் வந்து போகாத எப்போதும் உள்ள ஒரு நிலை உண்டா...?

“நிலைகள் மேல் உள்ள உன் காதல் இன்னும் தீர்ந்த பாடில்லை”

“ஞான விடுதலையை இயக்கமற்ற ஒரு நிலையாக மட்டுமே சுருக்கி வரையறுத்துக் கொள்ள முடியாது...

அது ஒரு ஒட்டு மொத்தமான இயக்கமும், இயக்கமற்ற தன்மையுமே, இயங்குதல் என்பது இயங்காமைக்கு எதிரல்ல என்கின்ற அடிப்படையைப் புரிந்து கொள்...

அது கடலாகவும், அலையாகவும் இருக்கிறது...

நிலையாகவும் நிலையற்றதாகவும் இருக்கிறது...

உன் எந்த கற்பனைகளுக்குள்ளும் அதை கொண்டு வர
முடியாது, ஏற்கனவே இக்கணத்தில் நடந்தேறிக் கொண்டிருக்கும் விஷயத்தை எப்படி நினைவுக்களுக்குள் அடக்க முடியும்...?

இப்போது வந்துபோய்க கொண்டிருக்கும் மூச்சுக் காற்றைக் அது எப்படியிருக்கும் என்று கற்பனை செய்வதைப் போலவே...

உண்மையை நீ உணர முடியாது, அனுபவிக்கவும் முடியாது....

அனுபவமின்றி பின் எப்படித்தான் அதைத் தெரிந்து கொள்ள முடியும் ஐயா ?

விடுதலையை நீ நுகர்ந்து அனுபவிக்கவே நாட்டம் கொள்கிறாய்...

அனுபவமே பிளவுபடுவதுதான்... முதலில் அனுபவிப்பதற்கு
“நீ” அல்லது “நான்” என்று ஒன்று இல்லை...

அனுபவத்திலிருந்து உருவாகும் மயக்கமே அது...

‘நான் ஓய்வாக இருக்கிறேன்...’, ‘தளர்வாக இருக்கிறேன்...’, ‘மகிழ்ச்சியாக இருக்கிறேன்...’ என்று அனுபவித்து உணர மனம் இரட்டிப்பாகியே தீரவேண்டும்...

ஆனால் விடுதலை என்பதே உன் நிஜமான ஒருமனத் தன்மையை அறிந்து கொள்வதே...

இங்கே, இப்போதே... உன்னுள் வருவதையும் போவதையும் எதுவானாலும் சுதந்திரமாக கடந்து போக அனுமதிப்பதில் உள்ளது...

ஒட்டு மொத்த இயக்கமாக அது பிரவகித்துக் கொண்டிருக்கிறது... “நான்” உணர்வும் அதன் பாகமே...

சுதந்திரமான பிரவாகத்தில் ஒவ்வொரு நொடியும் “கற்றல்’ துவங்கி நீ எதிர்கொள்ளும் எல்லா சூழல்களுமே உனக்கு ஒரு மெய்ப் பாடமாகிவிடும்...

உன் அடையாளங்களை எதிர்ப்பற்று, ஏற்று அனுமதிக்கையில் அடிப்படை இயல்பில் மாற்றமடைந்து, உன் இருப்பினை எல்லைகளற்றதாக கண்டு கொள்ளலாம்..

முற்காலத்தில் அந்த எல்லயற்றதையே, “நிலை”களாக்கி வர்ணிக்கும்போது “பேரானந்தம்” என்று அழகுறக் குறிப்பிட்டிருக்கலாம், அல்லது யோக சாதனைகள் மூலம் அடையும் சில நிலைகளையும் அவ்வாறு குறிப்பிட்டிக்கலாம்.

எது எவ்வாறாயினும் “ஞான விடுதலை” மிக எளிதானது...
பூரண ஏற்புத் தன்மையில் எப்போதும் எரிந்து கொண்டிருக்கின்ற குளிர் நெருப்பு அது.

2 comments:

  1. ஞான விடுதலை என்பது !

    ஞானம் என்பது சொல்லித் தெரிந்து கொள்வதில்லை அருளால் அனுபவத்தால் அறிவது,
    அனுபவம் அவரவர் செயலுக்கு தகுந்தாற் போல் கிடைக்கும்.மனித உருவங்கள் வேறுபடுவது போல் அனுபவமும் வேறுபடும்,இந்த உலகத்தில் எந்த அளவுக்கு அனுபவித்து உள்ளார்களோ அனைத்தும் திருப்பி தந்துவிட வேண்டும் .திருப்பித் தராமல் தியானமோ ,தவமோ,யோகமோ,செய்வதால் சிறு ஒளி உண்டாகும் அதனால் பல்லு இளித்து இறுமாந்து கெட நேரிடும் .பெரிய லாபம் ஒன்றும் கிடைத்து விடாது .

    வாங்கிய கடனை திருப்பித் தராமல் இருந்தால் கொடுத்தவன் விடுவானா ?விடமாட்டான் ,அதுபோல் உலக இச்சையில் வாழ்ந்து அனுபவித்த தேக சுதந்திரம்,ஜீவ சுதந்திரம்,போக சுதந்திரம் மூலமாக அனுபவித்த அனைத்தையும் ,ஜீவ காருண்யத்தால்,ஜீவர்களுக்கு உபகாரம் செய்யவேண்டும் ,உபகாரம் சமமாகும் போது அன்பு,தயவு ,கருணை,தானே உண்டாகும்.அதன் பின்பு அறிவு விளங்கும் .அதன் பின் அருள் வெளிப்படும் .அதன் பின் ஞானம் என்பதும் ஞான விடுதலையும் கிடைக்கும் .பற்றிய பற்று அனைத்தினையும் பற்று அற விட்டு அம்பலப் பற்றே பற்ற வேண்டும் .இதுவே ஞானம் அடையும் துவாரமாகும் .

    அன்புடன் ஆன்மநேயன் ,கதிர்வேலு.

    ReplyDelete
  2. பற்றுக பற்றற்றான் பற்றினை!கடவுளை பற்றாதா நிலையில் ஞானத்தேடல் என்பது சூனியத்தில் போய் முடியும்!ஞானமும் சூனியவாதமும் மிக நெருங்கியவை!மாயா தேவியிடம் விடுபட்டாலும் சாயாதேவியிடம் விடுபடுவது ரெம்ப கஸ்டம்!கடவுள் தான் மனது வைக்க வேண்டும்!

    ReplyDelete